^பேசும் கவிதைகள்^

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.


ஸ்ரீமதி

தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

--

லோகு

உன்னை பிரிந்து விட்ட துக்கத்தில்
வானத்து தேவதைகள் எல்லாம்
கண்ணீர் விட்டு அழுகின்றன..
உன் பிறந்தநாள் தோறும் மழை..

--

ஜோதிபாரதி

விட்டு விட்டது மழை
விடவில்லை தூவானம்
நாற்றமடிக்கிறது
கிடை தண்ணீர்
எப்பொழுது வ(வி)டியும்

--

தமிழ் பிரியன்

என் நினைவுகளைப் போலவே
கலங்கலாக இருக்கும்
புது மழையின் தூறல்களே!
உங்களுக்குத் தெரியுமா?
நானும் ஒருநாள் உங்களைப்
தெளிவாகவே வந்திறங்கி
இப்பூமியில் இருந்தேன்.

--

Thamizhmaangani

உனக்காக
காத்திருக்கும்பொழுது
மழைத்துளிகளை ரசிக்கிறேன்
உன் கன்னக்குழிகளின்
ஞாபகம் வருவதால்

--

நான் ஆதவன்

என் வீட்டு வாசலில் பார்த்தபோது
எனக்கு வந்தது ஆத்திரம்
எவனோ பெய்த -த்திரத்திற்கு....

--

G3

காதலியை
காண வரும் காதலனாய்
உனக்கு முன் பூமிக்குவந்த
நீர்த்துளிகளை தேடி
ஆனந்தமாய் கலக்கிறாய் !!

மேகத்துடன் சண்டையிட்டு
வெளிநடப்பு செய்கின்றன
மழைத்துளிகள் !!!

--

மின்னல்

1.
துளியென விழுந்தாய்
நீரலையாய் நகழ்ந்தேன்.

2.
என் அமைதியை
துளித்துளியாய் சிதைக்கின்றாய்
துவானமாய் நீ விழுந்து

3.
தூரல் புள்ளிகள் சுற்றி
வட்ட வட்ட கோலங்கள்

--

கே.ரவிஷங்கர்

தலைப்பு: கல்லெறிந்தவர்கள்

6வது வகுப்பில் கெளசல்யா
8வது வகுப்பில் ராதா
பிளஸ் ஒன்னில் கேத்தரின்
கல்லூரி முதல் வருடத்தில் ரம்யா
மூன்றாவது வருடத்தில் ஜானவி
முடிக்கும் போது (டெல்லி) ஷ்ருதி
இந்த மொசைக் குளத்தில்
கல்லெறிந்து விட்டுப்
போனவர்களின்
நினைவுகள் கலையாமல்
சங்கு சக்கரமாக
அங்கங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது
கடைசியாக கல்லெறிந்து
கல்யாணம் ஆகிக்
கலைந்துப் போன
என் மனைவியின்
பெரிய சக்கரத்தைச்
சுற்றி


--


குசும்பன்


இராவுல முட்ட முட்ட
குடித்த பீரு
ஓடுது ஆறா
ரோட்டுல!


--


Subha


இறைவா..
எங்கள் கண்ணீரை உன்
அபிஷேகத்துக்குக் காணிக்கையாக்குகிறோம்..
மனம் இறங்கி எம் குல
மக்களின் அல்லலைத்
துடைக்க வா
சீக்கிரம்..
கண்ணீர்த்துளி சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..
அது வெள்ளமாகி எங்களைக்
கொல்லுமுன் வந்துவிடு!


--


sakthi


உன் அன்பு மழையில்
நனைய வந்தால்
நீயோ வசவு மழையில்
வருத்தப்படுத்துவாய்

அப்போதும்
தூவானத்தின் தூரல்களும்
சில்லென்ற சாரல்களும்
சுடும் நீ இல்லாத போழ்துகளில்


--


அன்புடன் அருணா


அடுத்த துளிக்காகக்
காத்திருக்கும்
குட்டிக் குட்டி
வட்டக் கிண்ணங்கள்!!!

வானம் முகம்
பார்த்துக் கொள்ள
விடாமல் இதென்ன?
மழைத் துளிகள்
முந்திக் கொண்டன!!!

வட்டத்துக்குள் வட்டம்
நீருக்குள் மழைத்துளி
இதென்ன???
பூமிக்குள் வானமா???


--


சூர்யா ௧ண்ணன்


திடீரென பெய்த மழையென
நீ வந்தாய்! இன்று
எஞ்சிய மண் வாசனை
நெஞ்செல்லாம்..,


--


Monks


இதுவரை விழுந்த
மொக்கைகளுக்குப் பின்
இன்றைய கவிதைத்துளிகளாய்
நீர்


--


vaasal


இந்த ஓர் மழைத்துளியைப் போன்றது தான் உன் பார்வையும்
என் மனக் கூட்டில் உள்ள
பட்டாம் பூச்சிக் கூட்டத்தில் கலந்து சிறகடிக்கிறது !


--


லவ்டேல் மேடி


ஒரு துளி மலையில்
உருவாகிறது பல வளையங்கள்
- இது அண்ணன் தங்கை போல
ஒன்றுடன் ஒன்று கலக்காத அன்பு.

ஆனால் இவ்வளையங்கள்
மற்ற துளியில் வரும் வளையங்களுடன்
ஒன்றோடு ஒன்று கலக்கும்
- இது உறவுக் காதல்.


--


Maddy


என் மனக்குளத்தில்
பட்டு தெறித்து
விநாடி பொழிதில்
வீரியம் குறைந்தன
வீணாக வந்த
வளைய கவலைகள்!!!


--


முத்துகுமரன்


மண் மீது
கரையும்
மழைக் கனவுகள்


--


மங்களூர் சிவா


கண்ணிலிருந்து
பெரும் மழை
புது மனைவி வைக்கும்
சாம்பார்


--


D.R.Ashok


தறை நனைத்து
எந்த அழகி போட்ட
ஆறு புள்ளி கோலமிது


--


மதிபாலா

எப்போதும் ஓயாத அலைகள்

இப்போது ஓய்ந்து போயின.

சீக்கிரம் உன் முகத்தைக் காட்டிவிடு.

சீரியஸ்ஸான சத்யாகிரகமாம் இது.!

***

மழைத்துளி கிளப்பிய அலைகள்

மனதுக்குள் மெல்லிய தென்றல்.

கடற்கரையில் மட்டும் தானா காற்று?

--

கும்க்கி

ஒரு துளியின் அழைப்பில்
விட்டு விடுதலை ஆகின்றோம்
நாம்

எல்லா கசடுகளிடனிருந்தும்
அப்போதைக்கு விடுதலை!

சூழ்நிலையின் போக்கு குறித்த,
எந்தவொரு சலனங்களுமில்லை மனதில்..

வாழ்வும் அதன் போக்குகளும் குறித்தான
கவலையற்று இருக்கின்றோம்
சில மணித்துளிகளேனும்..

மழையும் நனைவதுவும்
ஈடுபார்க்கவியலாது இன்னபிற
அனுபவங்களுடன்..

செடிகளும் கொடிகளும் மரங்களும்
இன்னபிற ஜீவராசிகளும்
உணர்ந்த அளவிற்க்கேனும்
மழை உணர்ந்த மனிதருண்டோ

எந்த ப்ரதி பலனுமின்றி
எல்லா உயிரையும் உய்விக்க வந்த
மழை குறித்த
செய் நன்றி இல்லை இங்கு யார்க்கும்

சேமிக்க இருந்த இடமும்
சுருங்கி வருகிறதிப்போது

காலத்தின் நாம் காலங்கடந்து
போயிருப்பினும்
இயற்கையின் கருணையின்றி
வாழ்க்கையில்லை
என உணர்வதெப்போது...

--

நட்புடன் ஜமால்

என்னை பற்றிய

உன் நினைவலைகள்

உன்னை பற்றிய

என் கனவலைகள்

இன்னும்

கலங்கலாய்...

--

கோவி.கண்ணன்

துளி முத்தங்கள்,

அத்தனையும் வெட்கங்களாக விரிகிறது!


--


பூர்ணிமா சரவணக்குமார்

மழை ஓய்ந்த பின்

முற்றத்து வீட்டின்

ஓடுகள் தவற விடும்

மழைத் திவலைகளை

கைகளில் பிடித்து

விளையாடுகையில்,

பிடறியில் விழும் அடி

ஒரு நாளும் வலித்ததில்லை!

ஆ.......வென்று துடிக்கும்

என் நாடகத்தை

அம்மா....

நிஜமென்று தான்

நினைத்திருக்கிறாள்!!

இன்றும் அதேபோல் விளையாடுகையில்,

விழாத அடியின்

வலி தாங்காமல்

தடவிப் பார்த்து

அலறுகையில் அலைந்து

அரற்றுகிறது கண்கள்!!!

--

இய‌ற்கை

தொடுவானில் இணைந்திருந்த‌

மேக‌க் காத‌ல‌னின் பிரிவால் உண்டான‌ பூமி ம‌க‌ளின்

முக‌ச்சுருக்க‌ம்

--

சென்ஷி

ஒரு பூ கிடைத்திருக்கலாம்
மறுப்பின்
கிளை விட்டிருக்கலாம்
மனம் தொட்டு அதிரவைத்து
விலகி ஓடும்
வரம்புகளுக்குள்
மழைத்துளி பட்டு
நீர்த்து கலையாமல் அலைகிறது
கோல முத்திரைகள்

--

எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!
--
நேற்று கரடியாகவும்
இன்று முயலாகாவும்
நாளை வேறு ஏதாகவும்
குழந்தைக்கு காட்சி தரும்
புகைப்படத்தில்.
ஒரே கவலை
அலையும் நீரில்
கப்பல் விட முடியாதது
மட்டுமே!
--
மெலிதாய்
இதழ் விரிக்கத்தொடங்கி
சப்த சிரிப்புகளில்
சுத்தமாய் மறைந்திருந்தது
குவளைப்பூ போன்றதொரு
மழையின் துளியும்
--
எத்தனை உயரத்திலிருந்து
விழுந்தாலும்
குழந்தையை சிரிக்க வைத்த பின்பே
மறைகிறது
தூறல் பொம்மைகள்
--
அடிவானம் தொட்டுவிட்ட
ஆசையில் அலைகிறது
மேகங்கள்
நீரலையாய்
--
உன் விழிகளிலிருந்து
இடம் தவறி
அலைகின்ற கண்ணீர்ப்பூக்கள்
தொட்ட வடிவமானதா
எப்படி சூட்டுவது
--
உனக்காக பெய்த மழையை
சேகரித்தும்
அதற்காக கவிதைகள் எழுதியும்
விடிகிறது பொழுது
அலையின் வடிவங்கள்
மனங்கள்தோறும்
--
குறிப்பார்த்து விழுந்த கல்லாக
நீர்த்துளி பட்டு
சிதறிய தண்ணீர்
நீ துளி பார்த்ததும்
சிதறும் நானாய்
--
பாதச்சுவடு படாமல்
குதிகாலை தூக்கி
கால் விரல்களால்
நடந்து போகிறாய்
கோலம் போட்டுக்கொண்டுவிட்டது
தண்ணீர்
--
ஒரு மழைக்கால இரவின்
ஆரம்பத்தில்
கொடுத்த முத்தம்
தீராமல்
தன் தடயங்களை பத்திரப்படுத்தியுள்ளது
நீ சென்ற பிறகும்
--
காதல் சின்னமாக
பத்திரப்படுத்த துடிக்கிறது
மனசு
நீ நனைந்த மழையை
சேகரிக்க
--
அத்தனை மழையிலும்
என்னை மூழ்கடித்து
நனையாத வெளிச்சமாய்
நகர்ந்து செல்கின்றது
என் மீதான உன் காதல்
--
மதுக்கோப்பை வடிவில்
காதல் பூத்திருந்தது
அடர் சிவப்பு வர்ணம்
நீர்த்திருந்ததில்
மிதந்து போனது
அவள் மழையில் நனைந்த அழகு
--
மழையுடன் உறவாடுதல்
எளிதாகி விட்டது
அரிதாகக் கிடைத்திருக்கும்
உன் பிரிவுக்காலத்தில்
--
தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்
--

தமிழன்-கறுப்பி...

நேற்று பெய்த மழையில் இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர் சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...
--
மூன்று வருடங்களுக்கு பிறகு நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின் மழை நேரப் பின்மதியங்களையும்.
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!
--
எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற தாழ்வாரத் தூவானங்களில் தெறித்தலைகிறது உன் முகம்
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?
--
வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம் மறக்கப்பட்டு விட்டதையும்..
--
வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள் தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,
வந்து விடு அல்லது மழையை கூட்டிப்போய்விடு!
--
நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில் வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில் நிகழந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழையும்,
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

--

Nithya Subramanian

அதோ பாரு தண்ணி
அதுல குதிச்சா வரும் ஜன்னி
ஹே டண்டனக்கா ..
ஹே டண்டனக்கா ..

7 comments:

மங்களூர் சிவா - கவிதை சான்ஸே இல்ல
கண்ணுல தண்ணி வர வெச்சுடுச்சு.

போட்டியில் கிடைத்த கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இந்த வலைப்பூவில் வெளியிட உதவிய ஆருயிர் அண்ணன் ஆயில்யன் அவர்களுக்கு என் பணிவான நன்றிகள். :)

முதல் கமெண்ட் அமித்து மம்மியா? வெரி குட்.. நன்றி.. :)

இதில் கவிதை எழுதி இருக்கும் திரு. கெ. ரவிஷங்கர் கவிதைகள் இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கிறது. ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள். :)

திரு. ரவிஷங்கருக்கு

வாழ்த்துகள்

எல்லாமே நல்லா இருக்கு... தொகுத்த தங்களுக்கு வாழ்த்துகள்! எனது கவிதைக்குரல் வலைக்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!

அனைத்தும் அருமை நண்பர்களே... வாழ்த்துகள்

சென்ஷி....ஒன்னும் சொல்றதுக்கில்ல.